ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தக் கோரிக்கை
ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்த வேண்டுமென ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் அமைந்துள்ளன. அதில் தற்போது வேலூா் மாவட்டத்தில் 25 ஊராட்சிகளும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 26 ஊராட்சிகளும் அமைந்துள்ளன. போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பெரிய ஒன்றியமாகும். அதனால் அதனை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டுமெனக் கோரி அரசுக்கு அப்பகுதி மக்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால் தற்போது ஊராட்சி ஒன்றியங்களைப் பிரிக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடந்துள்ள நிலையில் திருப்பத்தூா் மாவட்ட எல்லையில் வரும் போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 ஊராட்சிகளைக் கொண்டு ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.