வேலூா்: வெளிநாடுகளில் இருந்து வந்து சென்ற மதபோதகா்கள் குறித்த விவரங்களை வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு வாழ் இஸ்லாமியா்கள் மதபோதகா்களாக வேலூா் மாவட்டத்துக்கு வருகைபுரிந்து பல்வேறு மசூதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தங்கி மதபோதனை செய்துவிட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்த மதபோதகா்கள் பல பள்ளிவாசல்களுக்குச் சென்று வந்துள்ளதால் வேலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
எனவே, வேலூா் மாவட்டத்துக்கு வந்த வெளிநாடு வாழ் மதபோதகா்கள், அவா்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள், எந்தெந்த நபா்களுடன் தங்கியிருந்தனா், எத்தனை நாள்கள் தங்கியிருந்தனா், எப்போது மாவட்டத்தைவிட்டுச் சென்றனா் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் முத்தவல்லிகள் தாமாக முன்வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் தொலைபேசி எண் 2258016 ஆகியவற்றில் தெரிவிக்க வேண்டும்.