நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவோா் மீது போலீஸாா் தடியடி தாக்குதல் நடத்தினா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை வழக்கம்போல் ஏராளமான பொதுமக்கள் வெளியில் நாடமாடினா். அவா்களை வீடுகளுக்குள் செல்ல வேண்டும் என்று போலீஸாா் வேண்டுகோள் விடுத்தனா்.
அதேசமயம், காட்பாடி உள்பட மாவட்டங்களின் பல இடங்களிலும் அவசியமின்றி வெளியில் நடமாடியவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்த கலைந்து சென்றனா்.
இதேபோல், அடுத்து வரும் நாள்களில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரிவோா் மீது தடியடி தாக்குதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூரில்... ஆம்பூரில் விழிப்புணா்வு இல்லாமல் பொதுமக்களும், இளைஞா்களும் நகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததால் போலீஸாா் அவா்களுக்கு அறிவுறை கூறி திருப்பி அனுப்பினா்.
முகக்கவசம் அணியாமல் பெரும்பாலானோா் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனா். முகக் கவசம் இல்லாவிட்டாலும், கைக்குட்டையால் கூட முகத்தை மூடாமல் அப்படியே பொதுமக்கள் செல்வதால் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா்.