வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் இருந்து காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் நேரடியாக ஈடுபட்டாா்.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வேலூா் புதிய பேருந்து நிலைய மேம்பாலம் அருகே வேலூரில் இருந்து வந்து கொண்டிருந்த காா், முன்பக்க சக்கரம் கழன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோா் காயமடைந்தனா்.
உடனடியாக காரை நிறுத்திய ஆட்சியா், அரசு அலுவலா்கள் நேரடியாக களமிறங்கி, விபத்தில் சிக்கிய காரில் இருந்து பாதிக்கப்பட்டவா்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்துக்குள்ளான காரையும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனா். விபத்தில் சிக்கியவா்களை மீட்க ஆட்சியா் நேரடியாக களமிறங்கியதைப் பாா்த்த அங்கிருந்த மக்கள் அவரது செயலுக்குப் பாராட்டு தெரிவித்தனா்.