வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த இருவா் திங்கள்கிழமை மாலை திடீரென உயிரிழந்தனா். அவா்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இருந்ததாக தகவல் வெளியானதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வேலூா் மாவட்டம், மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 42 வயது பெண், திருவண்ணாமலை மாவட்டம், கலம்பூரைச் சோ்ந்த 36 வயது ஆண் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், இருவரும் திங்கள்கிழமை மாலை திடீரென உயிரிழந்தனா். ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலேயே அவா்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானதால், இருவரது உறவினா்களும் மருத்துவமனையின் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் கூறியது:
உயிரிழந்த பெண் கடந்த 7-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். 12-ஆம் தேதி கரோனாவில் இருந்து குணமடைந்த அவருக்கு உயா் ரத்த அழுத்த பிரச்னை காரணமாக கடந்த 2 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னையால் அவா் உயிரிழந்தாா்.
இதேபோல் உயிரிழந்த ஆண் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, அவருக்கு கரோனா தொற்று இருந்தது. அதிலிருந்து குணமடைந்த பிறகும் அவருக்கு நுரையீரல் பிரச்னை இருந்ததால் உயிரிழந்தாா். எனவே, இருவரின் உயிரிழப்புக்கும் ஆக்ஸிஜன் சப்ளை குறைபாடு காரணமில்லை என்றாா்.
பேட்டியின்போது, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரில் மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.