வேலூா்: வேலூா் கொணவட்டம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து வருவதாகக் கூறி அப்பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
வேலூா் கொணவட்டம் மதீனா நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதிக்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. கால்வாய் வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் மழையையொட்டி மழைநீருடன் கழிவுநீா் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதுடன், இதனால் விஷப் பூச்சிகள் தொல்லைகளும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக் கோரி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனராம். எனினும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததை அடுத்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோா் கொணவட்டம், பிரதான சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட வந்தனா்.
தகவலறிந்து விரைந்து வந்த வேலூா் வடக்கு போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து வரும் திங்கள்கிழமைக்குள் சாலையைச் சீரமைத்துத் தருவதாக மாநகராட்சி 4-ஆவது மண்டல உதவி ஆணையா் ஜோசப்பிரபுகுமாா் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.