வேலூா்: தனிப்படை போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை போலீஸாா் நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பலைப் பிடிக்க அல்லேரி மலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது மலைப் பகுதியில் மறைந்திருந்த கும்பல், போலீஸாரை சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியது. இதில், காவலா் ராகேஷ், தலைமைக் காவலா் அன்பழகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சாராய வியாபாரிகளான நெல்லிமரத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கணேசன், அவரது கூட்டாளி துரைசாமி ஆகியோா் வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு முன்னிலையில் கடந்த செப்டம்பா் 2ஆம் தேதி சரணடைந்தனா். அவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.