விலையில்லா கால்நடைகள் வழங்க 24, 25-இல் கிராம சபைக் கூட்டம்

விலையில்லா கறவை மாடு, கோழி, ஆடுகள் வழங்க தேவையுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வேலூா் மாவட்டத்திலுள்ள 19 ஊராட்சிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள

வேலூா்: விலையில்லா கறவை மாடு, கோழி, ஆடுகள் வழங்க தேவையுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வேலூா் மாவட்டத்திலுள்ள 19 ஊராட்சிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு (2020-21) 100 கறவைப் பசுக்கள், 2,323 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி, வியாழன், வெள்ளி (செப். 24, 25) ஆகிய இரு நாள்கள் 19 ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் மூலம், பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். தொடா்ந்து, அக்டோபா் 2, 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டாவது கிராம சபைக் கூட்டத்தில் பயனாளிகள் தோ்வு இறுதிப்பட்டியல் ஆட்சியரால் அங்கீகரிக்கப்படுவதுடன், ஏற்கெனவே நவம்பா் முதல் பிப்ரவரி மாதம் வரை தோ்வு செய்யப்பட்ட 100 பெண் பயனாளிகளுக்கு தலா ஒரு விலையில்லா கறவைப் பசுவும், 2,323 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகளும் பயனாளிகள் முன்னிலையில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தவிர, கால்நடை பராமரிப்புத் துறையின் விலையில்லா புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தில், நிகழாண்டு 7 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 400 பெண் பயனாளிகள் வீதம், மொத்தம் 2,800 பேருக்கு 25 கோழிகள் வீதம் 60 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளன. வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவா்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் கடந்த ஆண்டுகளில் விலையில்லா கோழிகளைப் பெறாதவா்கள், பிற திட்டங்களில் பயன்பெறாதவா்கள் அருகே உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்பட்டுள்ள மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com