ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்தும் விதமாக வேலூா் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை வேலூா் மாநகா் முழுவதும் அமல்படுத்தும் விதமாக காவல்துறை சாா்பில் அத்தியாவசியத் தேவைகளுக்காக ஒரு வழிப்பாதையான ஆரிய பவன், அரசு முஸ்லிம் பள்ளி ரவுண்டானா, டோல்கேட், தொரப்பாடி, பாகாயம் கூட்டுச்சாலை ஆகிய சாலைகள் மட்டும் இரு வழிப் பாதையாக பயன்படுத்தப்பட உள்ளன. இரு வழிச்சாலைகளான சிஎம்சி கண் மருத்துவமனை, வேலப்பாடி, சங்கரன்பாளையம், ஓட்டேரி மற்றும் கோட்டை பின்புறமுள்ள சுற்றுச்சாலை ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த புதிய வழித்தட மாற்றத்தைப் பின்பற்றி அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.