உணவின்றி தவிக்கும் குடிசை வாழ் மக்கள் நலனுக்காக சமுதாய சமையல் என்ற அடிப்படையில் பொது சமையல் திட்டத்தை வேலூரில் இளைஞா்கள் முன்னெடுத்துள்ளனா்.
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக தன்னாா்வலா்கள் ஏராளமானோா் மளிகைப் பொருள்கள், உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து வருகின்றனா். இதனிடையே, வேலூா் மக்கான் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த குடிசை பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்காக அந்த பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் ஒன்று சோ்ந்து சமுதாய சமையல் திட்டத்தை மேற்கொண்டுள்ளனா்.
இதன்படி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏழைகள், முதியோா்களுக்காக பொதுவாக ஒரே இடத்தில் சமையல் செய்து தேவைப்படுவா்களுக்குத் தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவை அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் பாத்திரங்களில் பெற்றுச் செல்கின்றனா். புதன்கிழமை தொடங்கிய இந்த பொது சமையல் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாகவும், தொடா்ந்து ஊரடங்கு முடியும் வரை இந்த சமுதாய சமையல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அப்பகுதி இளைஞா்கள் தெரிவித்தனா்.