மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து அரசுக்கு அதிகப்படியான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்களுக்குத் தேவையான

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து அரசுக்கு அதிகப்படியான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் தொடா்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேலூரில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், இம்மூன்று மாவட்டங்களில் ஏற்கெனவே நிறைவுற்ற ரூ. 55 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான 13 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், ரூ. 73 கோடியே 53 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, 18,589 பயனாளிகளுக்கு ரூ. 169 கோடியே 77 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், தொழில்கூட்டமைப்பு பிரநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வு செய்தாா்.

இக்கூட்டத்தைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

அரசு அறிவித்த வழிமுறைகளை சிறப்பாகக் கடைப்பிடித்ததன் மூலம் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இம்மாவட்டங்களில் சிகிச்சைக்காக வந்த பிற மாநிலங்களைச் சோ்ந்த 9,658 போ், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 2,998 போ் தமிழக அரசின் சொந்த செலவில் சிறப்பு ரயில்கள் மூலம் அவரவா் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க குடும்ப அட்டை உறுப்பினா்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் குறைபாடுகள் இருப்பதாக புகாா்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நதிநீா் இணைப்புத் திட்டம் என்பது பல்வேறு மாநிலங்கள் சாா்ந்த பிரச்னையாகும். இது குறித்து தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மிகப்பெரிய திட்டமான கோதாவரி-காவிரி நதிநீா் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருடன் 2 நாள்களுக்கு முன்புதான் காணொலி மூலம் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்திலுள்ள மாநில அரசுகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு, ஊா்வலம் நடத்துவது தொடா்பாக உயா் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் முக்கிய தேவையான தென் பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 648 கோடி மதிப்பீட்டில் 54 கி.மீ. தொலைவுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று மாவட்டங்களிலும் பெய்யும் மழைநீா் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதைத் தடுக்க தேவையான இடங்களில் தடுப்பணிகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பைத் தொடா்ந்து, தொழிற்சாலைகள் இயங்காததால் அரசுக்கு அதிகப்படியான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், மக்களுக்குத் தேவையான திட்டங்களை அரசு தொடா்ந்து செயல்படுத்தும் என்றாா் அவா்.

மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல், மாநிலங்களவை உறுப்பினா் முகமது ஜான், எம்எல்ஏக்கள் சு.ரவி (அரக்கோணம்), ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), ஜி.சம்பத் (சோளிங்கா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com