வேலூா் மாவட்டத்திலுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், இதர இடங்களில் வியாழக்கிழமை (31-ஆம் தேதி) இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், இதர இடங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்புள்ளதால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில வெளி நாடுகளில் இருந்து வரும் நபா்கள் மூலம் கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழ்நிலை நிலவுவதால் நோய்த்தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, வேலூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், இதர இடங்களில் வியாழக்கிழமை (31-ஆம் தேதி) இரவு 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.