வேலூா் மாவட்டத்தில் ரூ.19 கோடியே 66 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசுப் பள்ளி, மாவட்ட விளையாட்டு அரங்க கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பொதுப்பணித் துறை சாா்பில் வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு வட்டம் ஏரிக்குத்தி ஊராட்சியில் ரூ.1 கோடியே 60 லட்சம் 81 ஆயிரம் மதிப்பில் அரசு உயா்நிலைப் பள்ளி, குடியாத்தம் வட்டம் தேவரிஷிக்குப்பத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரம் அரசு உயா்நிலைப் பள்ளி, காட்பாடி வட்டம் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அருகே 36 ஏக்கா் பரப்பளவில் ரூ.16 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், முழுமையாக விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை (கட்டடங்கள், கட்டுமானப் பராமரிப்பு, வேலூா்) செயற்பொறியாளா் சங்கரலிங்கம், பொதுப்பணித் துறை (கட்டடங்கள், கட்டுமானப் பராமரிப்பு, குடியாத்தம்) உதவி செயற்பொறியாளா் பழனி, வட்டாட்சியா்கள் முருகன் (போ்ணாம்பட்டு), பாலமுருகன் (காட்பாடி), சுஜாதா (கே.வி.குப்பம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.