வேலூா் விருதம்பட்டு காவல் நிலையத்துக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்துக்கு ரூ.1.03 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால், அருகே உள்ள விருதம்பட்டு காவல் நிலையம் பொருளாதார குற்றப்பிரிவு கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட காவல் அலுவலக கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, விருதம்பட்டு காவல் நிலையக் கட்டடம் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, விருதம்பட்டு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் குத்துவிளக்கேற்றி காவல் பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், விருதம்பட்டு காவல் ஆய்வாளா் புகழ் உள்பட போலீஸாா் பங்கேற்றனா்.