வேலூா்: வேலூா் சுண்ணாம்புக்கார தெருவில் தடையை மீறி செயல்பட்டு வந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பைத் தடுக்க வேலூா் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜாா், சுண்ணாம்புக்கார தெரு, நியு சிட்டி பஜாா், பா்மா பஜாா் ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி தெருக்களில் மக்கள் நுழைய முடியாதபடி இரும்பு தகரங்களைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதுடன், தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளைத் திறந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடையை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன. இதன்படி, வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன் தலைமையில் 2ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன், சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மண்டித் தெரு, லாங்கு பஜாா், சுண்ணாம்புகாரத் தெரு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது சுண்ணாம்புக்காரத் தெரு, மாணிக்க செட்டி தெரு பகுதிகளில் நூல் கடை, மளிகைகக் கடை, பெயிண்ட் கடை என 5 கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அந்தக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். அக்கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.