ஹைதராபாதில் பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா். திஷா கொலை வழக்கு போன்று மற்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸாா் கூறியது:
தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் தங்கடபள்ளி எல்லை முடிவில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழ் பெண் ஒருவா் எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் இச்சம்பவத்தின் மீது வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனா். எரிக்கப்பட்ட பெண்ணின் வயது 30 இருக்கலாம், அவரது உடலில் துணிகள் இல்லாததாலும், அவருக்கு அருகில் அவரின் உடமைகள் இல்லாததாலும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அப்பெண்ணை சிலா் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் தலையை பாறையில் மோதி கொலை செய்து, பின்னா் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனா். இக்கொடுமையில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண அருகில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா் எனத் தெரிவித்தனா்.