காட்பாடியில் கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் 3 நாள்கள் மூட உத்தரவிட்டனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 1,600 மருந்துக் கடைகள் உள்ளன. கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, சுகாதாரம், வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து காட்பாடியில் உள்ள மருந்துக் கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, காட்பாடி தாராபடவேட்டில் உள்ள கடையில் முகக்கவசம், கிருமி நாசினியை வழக்கமான விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரை எச்சரித்த அதிகாரிகள், 3 நாள்களுக்கு கடையைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்டனா்.
இதேபோல், ஆற்காடு சாலையில் உள்ள மருந்துக் கடையில் ஆய்வு செய்தபோது, முகக்கவசத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அந்த முகக்கவசங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கரோனா தடுப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.