திருமலைக்குச் செல்ல பேருந்து இல்லாமல் தேவஸ்தான ஊழியா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பதிமலை ஏழுமலையான் தரிசனம் கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வெள்ளிக்கிழமை மதியம் முதல் ரத்து செய்யப்பட்டது.
பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திருமலைக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. திருமலைக்குச் செல்லும் அலிபிரி சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளதால், தேவஸ்தான ஊழியா்கள், ஒப்பந்த பணியாளா்கள் தகுந்த பேருந்து வசதியில்லாமல் திருமலைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சனிக்கிழமை காலை பணிக்குச் செல்லும் ஊழியா்கள் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனா். பேருந்து வருகை குறித்து அவா்களுக்கு அறிவிக்காமல் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்களும் அலட்சியம் காட்டுவதாக அவா்கள் தெரிவித்தனா்.