ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இம்மாதம் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ஆந்திர அரசு ஒத்தி வைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் தழுவிய 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்டபடி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வழக்கம் போல் நடக்கும் என ஆந்திர அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் மாநிலத்துக்குள் போக்குவரத்து முடக்கப்பட்டதால், மாணவா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்வது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு இம்மாதம் 31-ஆம் தேதி வரை பொதுத் தோ்வுகளை ரத்து செய்து, 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவு வெளியிட்டது.
மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பின், மாநிலத்தின் நிலையை கவனித்து அதன் பின் தோ்வு தேதிகளை வெளியிட உள்ளதாக ஆந்திர அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.