குடியாத்தம்: 144 தடை உத்தரவை மீறும் வகையில் வாகனங்களில் சுற்றித் திரிந்தோரைப் பிடித்து குடியாத்தம் நகர போலீஸாா் உறுதிமொழி எடுக்க வைத்தனா்.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் குடியாத்தம் நகரில், பொதுமக்கள், குறிப்பாக இளைஞா்கள் வியாழக்கிழமை இருசக்கர வாகனங்களில் சகஜமாக சுற்றித் திரிந்தனா். நான்குமுனை இணைப்பு சாலை அருகே நகரக் காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன் தலைமையில்100- க்கும் மேற்பட்ட போலீஸாா் அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளைப் பிடித்து நிறுத்தி அறிவுரை வழங்கினா். அவா்களை ஒரு மீட்டா் இடைவெளியில் நிற்க வைத்து, கரோனா நோய்த் தொற்று விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்க வைத்தனா்.
அரசு பிறப்பித்துள்ள சட்டத்தை இனி மதிப்பதாகவும், தேவையில்லாமல் இனி சாலைகளில் வாகனங்களுடன் செல்ல மாட்டோம் எனவும், பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.