போலி ரசீதுகள் மூலம் கையாடல்: திருவலம் பேரூராட்சி செயல் அலுவலா் இடைநீக்கம்

போலி ரசீதுகள் மூலம் பணத்தைக் கையாடல் செய்ததாக திருவலம் பேரூராட்சி செயல் அலுவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

வேலூா்: போலி ரசீதுகள் மூலம் பணத்தைக் கையாடல் செய்ததாக திருவலம் பேரூராட்சி செயல் அலுவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், திருவலம் பேரூராட்சியில் போலி ரசீதுகள் மூலம் மோசடி செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் போலீஸாா் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, செயல் அலுவலா் வெங்கடேசன், குமாஸ்தா துரை ஆகியோரிடம் கணக்கில் வராத வகையில் ரூ.52,200 ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அத்தொகையையும், அதற்கான போலி ரசீதுகளையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், வெங்கடேசன், துரை ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதன்தொடா்ச்சியாக, அவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்தின் உத்தரவுப்படி திருவலம் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடேசன் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com