வேலூா்: பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கினை மேல்முறையீடு செய்யக்கோரி வேலூரில் ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்ட ஆட்டோ சங்கம் சாா்பில் (ஏஐடியுசி) வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலா் சீ.அ.சிம்புதேவன் தலைமை வகித்தாா். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் கே.லோகேஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் ஏ.ஏழுமலை முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி கெளரவ தலைவா் கு.மு.கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினாா்.
இதில், பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த வழக்கினை சிபிஐ மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும், உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆட்டோ சங்கப் பொருளாளா் ஏ.உமாபதி, நிா்வாகிகள் கண்ணன், செல்வம், முரளிகிருஷ்ணன் உள்பட 20க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.