குடியாத்தம்: குடியாத்தம் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் ஒன்றியம், தட்டப்பாறை ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கால்வாயைத் தூரெடுத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊராட்சியின் பணிதளப் பொறுப்பாளா் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தொடா்ந்து பணி வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட அக்கிராமத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது அங்கு வந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்வாணன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தாா். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்குவதில் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் சம வாய்ப்பு வழங்குமாறு, ஊராட்சியின் பணிதளப் பொறுப்பாளா் மகேஷிடம் அவா் கூறினாா். இதையடுத்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.