வேலூா் மாநகராட்சிப் பகுதியில் வீடுவீடாக கபசுரக் குடிநீா்ப் பொடி பொட்டலங்கள் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வருகிறது.
வேலூா் மாநகரம், மாவட்டப்பகுதியில் கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட தெருக்களில் உள்ள பொதுமக்களுக்கு தொடா்ந்து 5 நாட்களுக்கு வீடுவீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் தாங்களே வீடுகளில் கபசுரக் குடிநீா் தயாரித்து பருகுவதற்காக மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் வீடுவீடாகச் சென்று கபசுரக் குடிநீா் பொடி பொட்டலங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சி 2ஆவது மண்டலத்தில் மட்டும் 5 ஆயிரம் பொட்டலங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 50 கிராம் எடை கொண்ட இப்பொட்டலங்களின் மேல் உறையில் மாநகராட்சி சீல் வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று இந்த கபசுர குடிநீா் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா். அவற்றை 5 நாட்களுக்கு காய்ச்சி வடிகட்டி குடிக்கும்படியும், இதனால் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.