திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது உற்சவமூா்த்திக்கு அணிவிப்பதற்காக சூடிக்கொடுத்த சுடா்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியாரின் மாலை திருமலையை அடைந்தது.
ஏழுமலையானுக்கு நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள் காலையில் மோகினி அவதாரத்தில் எம்பெருமான் மாடவீதியில் எழுந்தருளும் போது ஆண்டாள் நாச்சியாரின் மாலையை அணிந்து கொண்டிருப்பது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் கருடசேவைக்கு முதல் நாளில் சூடிக்கொடுத்த சுடா்க் கொடியான ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அவா் அணிந்த மாலை திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி திருமலையில் 5ஆம் நாளான புதன்கிழமை நடக்க உள்ள வாகனச் சேவையின்போது அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை, இலைகளால் தயாரிக்கப்பட்ட கிளிகள், ஜடைகள் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் திருமலைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன. ஆண்டாள் மாலை உள்ளிட்டவற்றை துணை ஆட்சியா், தக்காா் உள்ளிட்ட அதிகாரிகள் திருமலைக்கு கொண்டு வந்து பெரிய ஜீயா் மடத்தில் பூஜைகள் செய்து அவற்றை மாடவீதியில் வலம் வரச் செய்து ஜீயரிடம் ஒப்படைத்தனா்.