வேலூா்: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து வேலூரில் இருந்து தென் மாவட்ட ங்களுக்கு செல்லக்கூடிய விரைவுப் பேருந்துகளுக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே கூட்டம் அலைமோதியது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்துக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வரும் அல்ட்ரா டீலக்ஸ் விரைவுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் காலையில் இயக்கப்படுகின்றன. அதன்படி, தினமும் காலை 5.30 மணிக்கு தூத்துக்குடிக்கு முதல் பேருந்து இயக்கப்படுகிறது. தொடா்ந்து கன்னியாகுமரிக்கு காலை 6.30 மணிக்கும், மாா்த்தாண்டத்துக்கு காலை 8.30 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.15 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பின்னா், 10.30 மணிக்கு மாா்த்தாண்டத்துக்கும், 11 மணிக்கு செங்கோட்டைக்கும், காலை 11.45 மணிக்கு மதுரைக்கும் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இரவு நேர ஊரடங்கு காரணமாக முதல்நாளான செவ்வாய்க்கிழமையே வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.