குடியாத்தம்: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்துள்ளதால், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக வேலூா் மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத் தலைவா் கா.ராமகிருஷ்ணன், பொதுச் செயலா் ஜே.சிவக்குமாா் ஆகியோா் வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால், கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவலின்போதும், பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், நாங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானோம், அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், வருவாய் இன்றி எங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. பொது முடக்கம் முழுவதும் தளா்த்தப்படும் வரை எங்கள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.