கைதான பெண் செயற்பொறியாளர், கணவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

கணக்கில் வராத ரூ. 2.27 கோடி ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்ட விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறையின் வேலூர் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி க
கைதான பெண் செயற்பொறியாளர், கணவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு
கைதான பெண் செயற்பொறியாளர், கணவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

கணக்கில் வராத ரூ. 2.27 கோடி ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்ட விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறையின் வேலூர் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி கோட்டச் செயற்பொறியாளர், அவரது கணவர் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஏப்ரல் முதல் 2021 நவம்பர் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இவர்களின் சொத்து மதிப்பு 430 சதவீதம், அதாவது ரூ.42.60 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470 அளவுக்கு உயர்ந்திருப்ப தாக லஞ்ச ஒழிப்பு துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையின் வேலூர் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் ஷோபனா (57). இவர் கட்டட ஒப்பந்ததாரர்களின் ரசீதுகளை அனுமதிக்க லஞ்சம் பெறுவதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஷோபனாவை கண்காணிக்கத் தொடங்கினர்.

அவர் சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.5 லட்சத்தைக் கைப்பற்றியதுடன், வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஷோபனாவின் குடியிருப்பில் இருந்தும் கணக்கில் வராத ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புடைய 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஒசூர் நேரு நகரிலுள்ள அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி, ரூ. 27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள நிரந்தர வைப்புச் சான்றிதழ், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ஷோபனா மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, ஷோபனா திருச்சி மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுமானம், பராமரிப்பு துணை கண்காணிப்பு பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஷோபனாவை வேலூர் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா, அவரது கணவரான ஓய்வுபெற்ற தனியார் நிறுவன பொறியாளர் என்.நந்தகுமார் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் மேலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மண்டல தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளராக ஷோபனா கடந்த 2017 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 15ஆம் தேதி வரை பணியாற்றி உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது குடும்ப சொத்து மதிப்பு 430 சதவீதம் உயர்ந்திருப்பதை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கணக்கிட்டுள்ளனர்.

அதாவது, கடந்த 2017 ஏப்ரல் 1ஆம் தேதி ரூ.ரூ.42 லட்சத்து 60 ஆயிரத்து 828 இருந்த அவர்களது குடும்ப சொத்து மதிப்பு 2021 நவம்பர் 15-ஆம் தேதியில் ரூ.2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470 அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ள து. அதனடிப்படையில், ஷோபனா, அவரது கணவர் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு காவலர்கள் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com