வேலூா்: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின்கீழ் அறிவித்த அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியா்களாக்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி வேலூரில் அப்பணியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலா் அமிா்தவள்ளி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட தலைவா் ராமச்சந்திரன், மாவட்ட செயலா் பரசுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளா் குப்பு கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 110-ஆவது விதியின் கீழ் அறிவித்த அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியராக்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும், பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.