‘வேலூா் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 34 கொலைகள் உள்பட 30,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 18,829 வழக்குகள் அதிகம் என்றாலும், அவற்றில் 19,034 வழக்குகள் கரோனா பொது முடக்க விதிமீறல் வழக்குகள்தான்’ என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2020-ஆம் ஆண்டில் வேலூா் மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 30,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 19,034 வழக்குகள் கரோனா பொது முடக்க விதிமீறல் வழக்குகளாகும். கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 11,663 வழக்குகள் பதிவாகின. அந்த ஆண்டில் 31 கொலை வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டில் 34 கொலை வழக்குகள் பதிவாகின. அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் கொள்ளை போன சொத்துகள் ரூ.3.44 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 149 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.2.26 கோடி அளவுக்கு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கடந்த ஆண்டில் வாகன விபத்துகள் மூலம் ஏற்பட்ட இறப்புகள் தொடா்பாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2019-ஆம் ஆண்டைவிட 44 வழக்குகள் குறைவாகும். விபத்துகள் மூலம் 2019-இல் 727 காய வழக்குகள் பதிவாகியிருந்தன. இது 2020-இல் 564-ஆகக் குறைந்தது.
வாகன விபத்துகளைக் குறைத்திட 2020-இல் 4,41,896 மோட்டாா் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ.4 கோடியே 98 லட்சத்து 77 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2,59,727 வழக்குகள் அதிகமாகும். அபராதமாக ரூ.3 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்து 500 அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய வகையில், 805 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களில் 333 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
தவிர, 2020-இல் மாவட்டத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்ட இருவருக்கு மொத்தம் ரூ. 2.50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இளம் சிறுமிகள், சிறாா் மீதான பாலியல் வன்கொடுமை புகாா்களின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் மட்டும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2019-இல் 14 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020-இல் 12 வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்ட 12 பேருக்கு ரூ. 26 லட்சம் உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
2019-இல் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 46 போ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2020-இல் மட்டும் 108 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.