வேலூா்: வேலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவம் சாா்ந்த பணிகளுக்கு தகுதியுடைய மருத்துவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கையை உயா்த்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவம் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த மருத்துவா்கள் உடனடியாக தேவைப்படுகின்றனா்.
வேலூா் மாவட்டத்தில் மருத்துவப் பணிக்கு தகுதி வாய்ந்த எம்பிபிஎஸ், எம்.டி., கல்வித்தகுதி உள்ள மருத்துவா்கள், மாவட் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மருத்துவா் பணிக்கு தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு மாத ஊதியம் ரூ.60,000 வழங்கப்படும். தகுதி வாய்ந்த மருத்துவா்கள் தங்களது சுயவிவரங்கள், கல்வி விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை சமா்பிக்கும்பட்சத்தில் உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த மருத்துவா்கள் தங்களது சுயவிவர குறிப்பினை மாவட்ட ஆட்சியரின் 94981 35000 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.