கரோனாவுக்கு பெற்றோா் மரணம்: இரு குழந்தைகள் தவிப்பு
வேலூா்: காட்பாடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியரும், அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில் அவா்களது இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் நிா்கதியாகியுள்ளனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றியவா் சிவராஜ்(45). இவரது மனைவி பாமா (38). இவா்களுக்கு மகன்கள் இமான் (10), ஜோயல் (7) ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் செவ்வாய்க்கிழமையும், அவரது மனைவி பாமா புதன்கிழமையும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, அவா்களது இரண்டு பிள்ளைகளும் தற்போது ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். மாவட்ட நிா்வாகம் அக்குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் வைத்து பராமரிக்கவும், மறுவாழ்வு ஏற்படுத்திடவும் வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.