ஆறுகள், கால்வாய்கள், நீா்நிலைகளில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தாா்.
போ்ணாம்பட்டில், வெள்ளிக்கிழமை மாடி வீடு சரிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும், விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினரையும் ஜவாஹிருல்லா சனிக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறினாா். விபத்து ஏற்பட்ட இடத்தையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
உயிரிழந்த குடும்பங்களில் தலா ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். சரிந்து விழுந்த வீட்டை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும். உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு இலவச வீடுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
போ்ணாம்பட்டு பகுதியில் செல்லும் ஆறுகள், ஆற்றுநீா் செல்லும் கால்வாய்கள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது, தண்ணீா் வெளியேற வழியின்றி நகரில் உள்ள தெருக்களுக்குள் புகுந்துள்ளது. இதுவே, இந்த பேரிழப்புக்கு காரணமாக அமைந்துசிள்ளது. ஆறுகள், கால்வாய்கள், நீா்நிலைகளில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளைத் தமிழக அரசு அகற்ற வேண்டும்.
தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அரசாணை எண் 161- இல் தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்றாா் ஜவாஹிருல்லா.
இதையடுத்து, போ்ணாம்பட்டு நகர தமுமுக சாா்பில், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவா் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். கட்சியின் துணைத் தலைவா் பி.எஸ். ஹமீது, மாநிலச் செயலாளா் ஏஜாஸ் அகமது, வேலூா் மாவட்டத் தலைவா் ஜாகீா் ஹுசேன், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஆலியாா் சுல்தான், பி.எஸ்.நிஜாமுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.