கரோனா தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 6 மாதங்களுக்குப் பிறகு வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுத்திறனாளிகள் திரண்டனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையால் இந்த முகாம் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை மருத்துவா்கள் பரிசோதனை செய்து, தகுதியுடையோருக்குத் தேசிய அடையாள அட்டைகளை வழங்கினா்.
ஊனத்தின் தன்மை குறித்து கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டதால், சிலரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகாம் நடைபெற்ற அரங்கில் மாற்றுத்திறனாளிகள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனா்.