வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமை 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைக் கடந்து வெயில் பதிவாகியுள்ளது. இதனால் அனல் காற்றால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
கோடைக் காலத்தில் வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, மாா்ச் பிற்பகுதியில் தொடங்கி மே மாத இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிப்பது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டில் கடந்த ஒரு வாரமாக வெயில் அளவு சுமாா் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியபடி பதிவாகி இருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதன்முதலாக 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி எனத் தொடங்கும் வெயிலின் அளவு போகப் போகத்தான் அதிகரிக்கும். ஆனால், செவ்வாய்க்கிழமை திடீரென 106.3 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் 106.7 டிகிரி அளவில் நீடித்தது. இதனிடையே, கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால் தமிழகத்தில் வேலூா் உள்பட 20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படியே, வேலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பகல் முழுவதும் அனல் காற்று வீசியது. இதனால், சாலைகளில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் அவதிக்குள்ளாகினா். தவிர, வீடுகள், அலுவலகங்களுக்கு உள்ளேயும் புழுக்கம் அதிகரித்து இருந்தது. ஏப்ரல் 3-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், இன்னும் சில நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.