சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்ட ஆட்சியா், இம்மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் தங்களது வாக்கினை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.
அதன்படி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அல்லாபுரத்திலுள்ள வேலம்மாள் போதி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்குச் சாவடியில் பொது மக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தாா்.
வேலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவி ரேகாவுடன் வந்திருந்து வாக்குப் பதிவு செய்தாா். அத்தொகுதியின் திமுக வேட்பாளா் ப.காா்த்திகேயன் தனது மனைவி பூங்கொடி, மகள் சந்தியா ஆகியோருடன் வேலூா் முஸ்லீம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்தாா்.
அணைக்கட்டு தொகுதியின் அதிமுக வேட்பாளா் த.வேலழகன் ஒடுகத்தூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். அத்தொகுதியின் திமுக வேட்பாளரான ஏ.பி.நந்தகுமாா் லத்தேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா்.