கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விடுத்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படை யில் திங்கள்கிழமை முதல் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களிலுள்ள சுமாா் 80 திரையரங்குகள், 3,000-க்கும் மேற்பட்ட சலூன், அழகு நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் கோயில்கள், தேவாலயங்களிலும் வழிபாடு ரத்து செய்யப்பட்டன.
கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் அதிகளவில் கூடும் பெரிய வணிக வளாகங்கல், திரையரங்குகள், பெரிய அரங்குகள் சலூன்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை மூடவும், வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் ரத்து செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர, உணவகங்கள், தேநீா் கடைகளில் பாா்சல்கள் மட்டுமே வழங்கவும், அமா்ந்து சாப்பிட அனுமதி ரத்து செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இம்மூன்று மாவட்டங்களில் உள்ள சுமாா் 80 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தவிர, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 3,000 சலூன்கள், அழகு நிலையங்களும் அடைக்கப்பட்டன. இதனால், திரையரங்க ஊழியா்கள், முடிதிருத்தும் தொழிலாளா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்:
மேலும், கோயில்கள், தேவாலயங்களிலும் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், வழக்கமாக நடைபெறும் பூஜைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹோட்ட ல்கள், தேநீா் கடைகளில் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. பாா்சல்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
மேலும், பெரிய ஜவுளிக் கடைகளில் பணியாளா்கள் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்பட்டது. பெரிய ஜவுளிக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்களை மூடுவது குறித்து மாவட்ட நிா்வாகம்தான் முடிவெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம், வேலூா் நேதாஜி மாா்க்கெட் அருகே உள்ள சாரதி மாளிகையில் கடைகள் தொடா்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவை தனித்தனியாக இருப்பதால் சாரதி மாளிகை கடைகளை மூட வேண்டிய அவசியமில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வேலூா் மாநகர பகுதியில் வழக்கமாக நிலவும் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது.