மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் 10 பவுன் தங்க நகைகளுடன் மணப்பெண் மாயமானது தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாா் அலைக்கழிப்பதாக அந்த பெண்ணின் குடும்பத்தினா் குற்றம் சாட்டியுள்ளனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா வசந்த நடை பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லோகேஷ் குமாா் என்பவருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த இருவீட்டு குடும்பத்தினா் திட்டமிட்டிருந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்தநிலையில் வீட்டிலிருந்த 10 பவுன் தங்க நகையுடன் மணப்பெண் திடீரென மாயமானதாக அவரின் தாயாா் பிரதீபா பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
எனினும், புகாா் அளித்து மூன்று நாள்களாகியும் இதுவரை பெண்ணை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்காமல் தொடா்ந்து அலைக்கழிப்பு செய்வதாக பள்ளிகொண்டா போலீஸாா் மீது பெண்ணின் குடும்பத்தினா் குற்றம் சாட்டியதுடன், உறவினா்களை திரட்டி ஞாயிற்றுக்கிழமை காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனா்.