வேலூா்: வேலூரில் நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கிய மாணவா் உயிரிழந்தாா்.
வேலூா் சின்னஅல்லாபுரத்தைச் சோ்ந்த காதா்பாட்ஷாவின் மகன் அஜிஸ் (13). தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை மாலை தனது நண்பா்களுடன் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்றாா். அப்போது, 25 லிட்டா் பிளாஸ்டிக் கேனை அஜிஸ் இடுப்பில் கட்டிக்கொண்டு பயிற்சி எடுத்துள்ளாா். திடீரென கயிறு அவிழ்ந்ததால் அஜிஸ் நீரில் மூழ்கினாா்.
தகவலறிந்த வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், விரைந்து சென்று நீரில் மூழ்கிய அஜிஸை தேடினா். இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. வியாழக்கிழமை மீண்டும் தேடப்பட்ட நிலையில், அஜிஸ் சடலமாக மீட்கப்பட்டாா்.
இது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.