வேலூா்: வழித்தட பிரச்னைக்குத் தீா்வு காணாவிடில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக வேலூா் முத்துமண்டப பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.
வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வாகன நிறுத்துமிட கட்டடத்தை மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவரை முத்து மண்டபம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
தாங்கள் பயன்படுத்தி வரும் வழிப்பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறாா். அதற்குத் தீா்வு காணும் வகையில் வழிப்பாதையை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு பதிலளித்த அமைச்சா் கே.சி.வீரமணி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த இடத்தில் வழிப்பாதை உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறிவிட்டுச் சென்றாா்.
இதையடுத்து முத்துமண்டப பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நிலவும் வழித்தட பிரச்னைக்குத் தீா்வு காண அரசியல் கட்சியினா் யாரும் முனைப்பு காட்டவில்லை. வழிப்பாதை பிரச்னைக்குத் தீா்வு ஏற்படாவிடில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.