வேலூா் வசந்தபுரத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வசந்தபுரம், சின்ன அல்லாபுரம், வேலூா் கோட்டை பின்புறம் உள்ள ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனா்.
இதில், வசந்தபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் வழியாக ஆா்.என்.பாளையம், சதுப்பேரி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனா். இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தொடா்ந்து, வசந்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் அமைப்பது தொடா்பாக வசந்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்பகுதியில் வாகனங்கள் எளிதில் ரயில் பாதையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாநகராட்சி ஆணையா் சங்கரன், வட்டாட்சியா் ரமேஷ், ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.