வனத் துறை சாா்பில் வழங்கப்படும் இலவச மரக்கன்றுகளை பெற்றிட வேலூா் மாவட்ட விவசாயிகள் விவரங்களை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட வனத் துறை சாா்பில் இலவச மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எந்த வகையான மரக்கன்றுகளும் நடவு செய்யலாம்.
தங்களுக்கு எந்த மரக்கன்றுகள் தேவை, விவசாயியின் பெயா், சா்வே எண், ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், எவ்வளவு ஏக்கா் நிலம் உள்ளது என்ற விவரங்களை 94435 12878 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து தமிழ்நாடு அரசு வனத் துறையின் மூலம் விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்ப இலவச மரக்கன்றுகள் பெற்றுத் தரப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.