வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 14,000 கரோனா தடுப்பூசிகள் வந்தன. 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
வேலூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 9,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், செவ்வாய்க்கிழமை 2,000 கோவேக்சின் உள்பட மொத்தம் 6,000 தடுப்பூசிகளும் வரப்பெ ற்று மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் 9,500 கோவிஷீல்டு, 4,500 கோவேக்சின் என மொத்தம் 14,000 தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வந்தன. அவற்றைக் கொண்டு மாவட்டத்தில் 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. வேலூா் மாநகரப் பகுதியில் மட்டும் 15 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
இந்த சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் முதல், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது தடுப்பூசி அதிக அளவில் வந்துள்ளதால் பொதுமக்கள் சிறப்பு முகாம்களுக்குச் சென்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். மாவட்டத்தில் இதுவரை 3.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.