குடியாத்தத்தில் இணைய பதிவு செய்யாமல் ஆட்டோக்களை இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில், திங்கள்கிழமை முதல் சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் இணைய பதிவு செய்துகொண்டு ஆட்டோக்களை இயக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. குடியாத்தம் நகரம், சுற்றுப் புறங்களில் இணைய பதிவு இல்லாமல் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து டிஎஸ்பி பி ஸ்ரீதரன் உத்தரவின்பேரில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ஆ.செல்லபாண்டியன், உதவி ஆய்வாளா் அன்பழகன் மற்றும் போலீஸாா் நகரில் முக்கிய சந்திப்புகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களுக்குச் சென்று ஓட்டுநா்களை அழைத்து, இணைய பதிவு செய்து கொண்டு ஆட்டோக்களை இயக்குமாறும், தவறும் பட்சத்தில் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனா்.
மேலும், ஆட்டோக்களில் 2 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும், முன் பக்க சீட்டில் பயணிகளை அமர வைக்கக் கூடாது, ஓட்டுநா்களும், பயணிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினா்.