கரோனா தொற்று அதிகமாகப் பரவியுள்ளதால், பரதராமியில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா்.
குடியாத்தத்திலிருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில், தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பரதராமி ஊராட்சி.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு பொது முடக்கம் நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் சிறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையில், பரதராமியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை 34 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் அதிக பாதிப்புக்கு ஆளானோா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஓரளவு பாதிப்புக்குள்ளானவா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். லேசான அறிகுறிகள் உள்ளவா்கள் வேப்பூரில் உள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
பரதராமியில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதன்கிழமை அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்ய மருத்துவா் குழு செல்கிறது. இந்நிலையில், பரதராமியில் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன.