கரோனா பொது முடக்கத்தால் வேலூா் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் அக். 18-ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தையொட்டி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிப். 26 முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரப்பெட்டி வைக்கப்பட்டு, அதன்மூலம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது.
தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்து பல தளா்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, வரும் 18-ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தி, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறும் இந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்று மனுக்களைப் பெற உள்ளனா்.
கூட்டத்துக்கு மனு அளிக்க வருவோா் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வருவதுடன், கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றிடவும் வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.