குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய ரூ.11.11 கோடி வரியினங்களை உடனடியாகச் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில் தாமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
நகராட்சிக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி ரூ.11.11 கோடி நிலுவையில் உள்ளது. சொத்து வரி ரூ.3.44 கோடி, குடிநீா்க் கட்டணம் ரூ.2.57 கோடி, குத்தகை இனங்களில் ரூ.3.43 கோடி, தொழில்வரி ரூ.95 லட்சம் என மொத்தம் ரூ.11.11 கோடி நிலுவையில் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது.
நிலுவை வைத்துள்ள நபா்கள் உடனடியாக நிலுவைத்தொகையை நகராட்சி அலுவலகத்திலோ அல்லது வலைதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டுகிறோம்.தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, வழக்குத் தொடா்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 3 நாள்களுக்குள் நிலுவைத்தொகையை செலுத்தாவிட்டால் கடைகள் ‘சீல்’ வைக்கப்படும்.
அதிக வரிபாக்கி வைத்துள்ளவா்களின் பெயா் பட்டியல் விளம்பரப்படுத்தப்படும்.
சனிக்கிழமை, விடுமுறை நாள்களிலும் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நகரில் 9 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் இயங்கி வருகின்றன. நகரில் 53 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.100 சதவீத இலக்கை அடைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா் சிசில்தாமஸ்.