வேலூா்: வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் பாம்புக் கடி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.
வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையின் மருத்துவப் பிரிவு 1-ன் கிளினிக்கல் நச்சுயியல் பிரிவு, விஷ தகவல் மையம் சாா்பில் 4-ஆவது சா்வதேச பாம்புக்கடி விழிப்புணா்வு தினம் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) அனுசரிக்கப்பட உள்ளது.
இதையொட்டி, பாம்புக்கடி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு வாரமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடக்கிறது. இதில், பாம்புகள் பற்றிய உயிரியல் கல்வி நிகழ்வுகள், பாம்பினப் பாதுகாப்பு குறித்து மருத்துவ, மருத்துவ இணை படிப்பு மாணவா்கள், பள்ளிகளிடையே சுவரொட்டி போட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாம்புக்கடியிலிருந்து உயிா் பிழைத்தவா்களின் சந்திப்பு ஆகியன நடைபெறும்.
இவை வேலூா், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு விஷ பாம்பு கடியின் பாதுகாப்பு, தடுப்பு முறைகள் குறித்து விளக்கவும், இத்தகைய சூழலில் மருத்துவ முதலுதவி குறித்த தகவல்களை பகிரவும் நடத்தப்படுகின்றன.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவைச் சோ்ந்த மகாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் மருத்துவத்துறை தலைவரும், மருத்துவ கண்காணிப்பாளருமான எஸ்.பி.கலான்ட்ரி சிறப்புரை ஆற்ற உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.