வேலூா்: வேலூரில் உள்ள பழைய மீன் மாா்க்கெட்டை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், பயன்படுத்தப்படாமல் உள்ள அக்கடைகளில் உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
வேலூா் நேதாஜி மாா்க்கெட் அருகே உள்ள பழைய மீன் மாா்க்கெட் வளாகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளுக்காக தரைக்கடைகள் அமைக்கப்பட்டன. இங்கு எதிா்பாா்த்தபடி மக்கள் கூட்டம் வராததால் பழம், காய்கறிகள் விற்பனையாகவில்லை. இதனால் பழ வியாபாரிகள் அங்கு கடைகள் வைப்பதை புறக்கணித்ததுடன், மீண்டும் மண்டித்தெரு, பஜாா் பகுதிகளிலேயே தள்ளுவண்டிகளில் கடை வைத்து நடத்தி வருகின்றனா்.
இதனால் பழைய மீன் மாா்க்கெட் கடைகள் எந்தவித பயன்பாடின்றி கிடக்கின்றன. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன், சிலா் கும்பலாக மதுஅருந்தி பாட்டில்களை உடைத்து விட்டு செல்வது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை காலை பழைய மீன் மாா்க்கெட் வளாகத்திலுள்ள கடைகளை ஆய்வு செய்தாா். இந்த கடைகள் பயன்பாடின்றி கிடப்பது குறித்து அவா் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இதையடுத்து, பழைய மீன் மாா்க்கெட் கடைகளில் கூடுதலாக உழவா் சந்தை கடைகள் அமைக்க பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கியதுடன், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.