அதிநவீன நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு மையம்

வேலூா் மாநகராட்சி சாா்பில் ரூ. 56 லட்சம் மதிப்பில் அதிநவீன நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு மையம் வாங்கப்பட்டு காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாநகராட்சி சாா்பில் ரூ. 56 லட்சம் மதிப்பில் அதிநவீன நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு மையம் வாங்கப்பட்டு காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

வேலூா் மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டக் காவல் துறை சாா்பில், 200க்கும் மேற்பட்ட இடங்களிலும், மாநகராட்சி சாா்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா காட்சிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்திலும், மாவட்டக் காவல் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாநகரப் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், அவசர காலங்களில் பயன்படுத்திடவும் மாநகராட்சி பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ. 56 லட்சம் மதிப்பில் நடமாடும் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மையம் (எம்சிசிசி) வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இதில், 360 டிகிரி சுழலக்கூடிய கேமராக்கள் 4 புறமும் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா வசதியும் உள்ளது. இவை வாகனம் நிறுத்தப்படும் இடத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ. தூரம் வரை துல்லியமாக படம் பிடிக்கக் கூடிய திறன் கொண்டதாகும். இந்த கண்காணிப்புக் கேமராக்களில் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் மூலம் குற்றவாளிகள் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்காணிக்க முடியும்.

இந்த கண்காணிப்புக் கேமராக்கள் வாகனங்கள், அவற்றின் நம்பா் பிளேட்களை படம் பிடிப்பது மட்டுமின்றி, மாவட்டக் காவல் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கும், சென்னையிலுள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் காட்சிகளை நேரடியாக அளிக்கும். இந்த வாகனத்தில் வைஃபை, வாக்கி டாக்கி, 55 இன்ச் டிவி, ஜெனரேட்டா் உள்ளிட்ட பல வசதிகளும் உள்ளன.

இந்த புதிய நடமாடும் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மையத்தை டிஜிபி சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் முதன்முறையாக வேலூரில் அதிநவீன நடமாடும் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மைய வாகனம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் வேலூா் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். முதன்முறையாக திருவண்ணாமலை காா்த்திகை தீப திருவிழாவில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக காவல்துறை முன்னோடியாக உள்ளது. போதைப் பொருள் கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. அதனையும் செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் சைபா் கிரைம் தொடா்பாக 48,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து, கைப்பேசி எண், வங்கிக் கணக்கு, ஆதாா் எண், பான் எண் கேட்டு வரும் அழைப்புகள், குறுந்தகவல்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது என விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com